அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் வெட்டியக்காடு பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்குக் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் - 01, அறிவியல் 01) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்ந பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம், நாகப்பட்டினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களைப் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்படும். 24.06.2025 நாள் முதல் 25.06.2025 நாள் வரையில் தேர்வு செய்யப்படும்.
பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 24.06.2025 மாலை 5.00க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
No comments: