பீஹார் அரசு பள்ளி ஆசிரியர் பணி : எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்
பீஹார் மாநில, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர, இந்தியாவில் எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.
கடந்த மாதம், 2ம் தேதி அரசின் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 1.78 லட்சம் ஆசிரியர்களை நியமிக்க, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்கான, தேர்வு முறை பி.பி.எஸ்.சி., எனப்படும், பீஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வாயிலாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பீஹார் மாநில பள்ளி ஆசிரியர்கள் நியமன சட்ட விதிகள், 2023ல் திருத்தம் செய்யப்பட்டது.
இச்சூழலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் , இன்று (ஜூன்.,27)ம் தேதி நடந்த, அமைச்சரவை கூட்டத்தில், மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு சேர, நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த, தகுதி வாய்ந்த நபரும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்த, முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
இதற்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, பீஹார் மாநில, அமைச்சரவை செயலக, கூடுதல் தலைமை செயலர், சித்தார்த் கூறியுள்ளதாவது:
அரசு நடத்தும் பள்ளிகளில் முன்பு, பீஹாரைச் சேர்ந்தவர்களையே, ஆசிரியர்களாக நியமிக்கும் விதிமுறை இருந்தது.
தற்போது, மாநில அரசு நடத்தும் பள்ளிகளில், ஆசிரியர்களை நியமிப்பதற்கான, குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை, ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நம் நாட்டில் உள்ள எந்தவொரு, தகுதி வாய்ந்த குடிமகனும், அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் ; இதற்கு, விண்ணப்பதாரர் பீஹார் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தாண்டு இறுதிக்குள், ஆசிரியர்கள் நியமனம் முடிவடையும்.
2006ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் கீழ் நியமிக்கப்பட்டவர்களும், தற்போதைய நடைமுறையின் கீழ், பணியில் சேர, தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments: