அரசு போக்குவரத்துக் கழகத்தில் 750 பணியிடம் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாற்றில் ரூ.30 லட்சம் செலவில் 4,500 மீட்டர் வரை தூர்வாரும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இதன்பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
பேருந்து சேவைகள் எங்காவது நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தால் கண்டிப்பாக அந்த சேவையினை தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 625 பேர், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் 125 பேர் மற்றும் இதர போக்குவரத்து கழகத்தில் தேவைக்கேற்ப பணியாளர்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 15 வருடங்கள் நிறைவடைந்த பேருந்துகளை இயக்க கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments: